கவிஞர்கள் எழுதி மனதில் பதிந்த சில வரிகள் சில
ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்!
நா.முத்துக்குமார்
காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!
நா.முத்துக்குமார்
கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!
பா.விஜய்
எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என்
மனசும்.
கம்பெனி சைக்கிளில்
போகும் உனை
வாடகை சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்
செயினும் என் தைரியமும்.
பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு
வரக்கூடாதா?
பா.விஜய்
ரோஸ் ஜஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்!
நிற மாற்ற விதி
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல்!
பா.விஜய்
சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி
எழுதத் தானோ?
பா.விஜய்
இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்
பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்
என்பது.
பழநிபாரதி
யாரோ நம் பெயரை
சுவரில்
கிறுக்கியிருந்ததைப்
படிக்கும் பொழுது
அச்சமாக இருந்தது.
நேற்று அதன்மீது
காதல் திரைப்பட போஸ்டரை
ஒட்டியிருந்ததைப் பார்க்க
மகிழ்வாக இருந்தது.
கபிலன்
உன் காலடியில்
ஊரும் எறும்பை
தயவுசெய்து
நசுக்கிவிடாதே
அது இழுத்துவரும் இரை
நம் காதலின்
பெயரெழுதிய
அரிசியாக இருக்கலாம்.
பழநிபாரதி
நீ ஒருமுறைதான்
பார்த்துவிட்டுப்
போனாய்என் வீட்டு ஆளுயரக்
கண்ணாடி
உன்
நிழற்படமாகிவிட்டது.
பழநிபாரதி
இரவும் இரவும் சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட இரகசியமான
இடம்
உன் இதயம்.
அதனால்தான் அங்கே
என்னை நீ
என்ன செய்கிறாய்
என்றே
தெரியவில்லை.
பழநிபாரதி
நீ பருவமகள்
உண்மைதான்.
குளித்து முடித்த உன்
கூந்தலில்
நீர் சொட்டும் போது
மழைக்காலம்.
சீவும்போது
இலையுதிர்காலம்.
நீ பூச்சூடும்போது
வசந்தகாலம்.
அதை அள்ளி
நான் போர்த்திக்
கொள்ளும்போது
குளிர்காலம்.
பழநிபாரதி
ஆதாம் ஏவாள் கனவில்
ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில்
பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில்
சைத்தான் துரத்துகிறது
அனைவரில் கனவிலும்
தோன்றிகடவுள் சொல்கிறார்
காதலித்து கெட்டுப் போங்கள்!
நா.முத்துக்குமார்
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
நா.முத்துக்குமார்
ஏனென்றால் போதை என்பேன்…
10 years ago
0 நீங்கள் சொன்னது:
Post a Comment